கால்நடை மருத்துவம் மற்றும் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர  மே 8ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல்,  திருநெல்வேலி,  ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி ஏ.ஹெச்) 460 இடங்கள் உள்ளன. 
இந்தநிலையில், 20192020ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் படிப்புகளில்  மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் மே 8ஆம் தேதி  முதல் ஜுன் 10ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.  இந்தப் படிப்புகள் குறித்த தகவல் குறிப்பேடு,  சேர்க்கைத் தகுதிகள்,  தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய பல்கலைக்கழக இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். 
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலைப் பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,  மாதவரம் பால்பண்ணை,  சென்னை600 051 என்ற முகவரிக்கு வரும் ஜுன் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கலந்தாய்வு எப்போது? கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் 24ஆம் தேதி வெளியிடப்படும்.   இந்தப் படிப்புக்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 9- ஆம் தேதி பிவி.எஸ்ஸி  ஏஎச் (சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு), பி.டெக் (சிறப்பு பிரிவு) கலந்தாய்வும், ஜூலை 10 ஆம் தேதி பிவி.எஸ்ஸி- ஏஎச் (கலையியல் பிரிவு) படிப்புகளுக்கு கலந்தாய்வும், உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜூலை 11 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் 360 இடங்களுக்கும்,  உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு 40, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்களுக்கும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்பிடிப்பில் 20 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.