தமிழகத்தில் உள்ள 3,200 அரசு பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்துப் பகுதிகளிலும் அரசு பள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. 
இதையடுத்து தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக படிப்பறிவு சதவீதம் அதிகரித்துள்ளது. 
இந்நிலையில் பருவம் எய்திய பள்ளி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும்
மேலும், பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ஆனந்தவள்ளி மனுத்தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, பள்ளிக்கல்வித்துறை செயலர் தரப்பில், தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 5,588 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 3,200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 
பிறப்பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் மூலம் மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. வளரிளம் மாணவி ஒருவருக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 3 பாக்கெட் நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. 
இதைத் தவிர அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப்புறச் செவிலியர்கள் மூலமாக பள்ளி செல்லாத வளரிளம் பெண்களுக்கும் நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் மீதமுள்ள 2,388 அரசு பள்ளிகளிலும் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.