523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மொழிகள் படிப்பை படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.
மாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளர்த்து கொள்ள ஆசிரியர்களின் ஆற்றலும், சிந்தனையும் தேவை.


அது தமிழகத்தில் சரியாக கிடைக்கிறது. மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை எந்த தயக்கமும் இல்லாமல் அமைத்து கொள்ளலாம் என குறிப்பிட்டார்.
அரசும், ஆசிரியர்களும் நினைத்தால் ஒரு மாணவரை கோபுரத்தில் உட்கார வைக்க முடியும். இந்த அரசு 15 லட்சத்து 40 ஆயிரம் மடிக்கணினிகள் ஒரே ஆண்டில் வழங்கி இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி கொடுக்கப்படும்.

மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும் கையடக்க கணினி (டேப்) இலவசமாக வழங்குவதற்கு இந்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதன் மூலம் பாடப்புத்தகங்கள் இல்லாமல் 'கியூ ஆர் கோடு' மற்றும் 'பி.டி.எப்' வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. 15 லட்சம் மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 'ஸ்மார்ட்' வகுப்புகளாக மாற்றப்படும். நம்முடைய கல்வி முறை இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வரும். கல்வி சேனல் மிக விரைவில் முதல்-அமைச்சர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.