பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அல்லது சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்தி வருகின்றன. 
நிகழாண்டுக்கான (2019-20) கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்த உள்ளது. கலந்தாய்வானது வழக்கம் போல ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்குகிறது.


விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்ப விநியோக தேதி உள்ளிட்ட விவரங்கள் உயராய்வு நிறுவனத்தின் புதிய இணையதளத்தில் ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளன. 
உயராய்வு நிறுவனத்தின் வழக்கமான இணையதளம் முடங்கியிருப்பதால், புதிய இணையதளத்தை கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய இணையதள விவரம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என உயராய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்