ஸ்ரீவில்லிபுத்தூர்,ஏப்.8: கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் 100 ஏழைக் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளருக்கு சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இ.பவுல் ஏசுதாசன் பணிபுரிந்து வருகிறார்.இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள வன்னியம்பட்டி அருகே உள்ள மொட்டமலை பகுதி மற்றும் செண்பகத் தோப்பு அருகே உள்ள ஆட்டுவலசல் பகுதியில் உள்ள 100 ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி அதற்கு உண்டான மளிகைப் பொருட்களையும் தனது சொந்த செலவில் வழங்கினார்.மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கொரானோ தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர்,வருவாய்த்துறையினர்,சுகாதார பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோருக்கு தினமும் மூன்று வேளை  உணவினை தொண்டு நிறுவனத்தோடு இணைந்து  வழங்கி வருகிறார்.
இவ்வாறு கொரானோ ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர்  நகர் காவல் ஆய்வாளர் இ.பவுல்ஏசுதாசனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.