பிரதிலிபி கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் நாளை முன்னிட்டு 'குருதட்சணை' என்னும் தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன் என்பார், அப்போட்டியில் 'யாருக்கு வாழ்த்துச் சொல்ல?..' என்னும் கவிதையை அனுப்பி வைத்திருந்தார். ஆசிரியப் பெருமக்கள் நிகழ்காலத்தில் அடைந்து வரும் சொல்லவொணாத் துயரங்களை அக்கவிதை சிறப்பாக எடுத்துரைத்ததைப் பாராட்டிப் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு பெற்ற அக்கவிதை பின்வருமாறு:

நான் யாருக்கு வாழ்த்துச் சொல்ல?...
கடைநிலையில் தள்ளப்பட்ட
இடைநிலை ஆசிரியச் சகோதரனுக்கா?

உபரி என்று உதறி
அங்கன்வாடிக்குப் பணியிறக்கம் செய்யப்பட்ட நடைபிண சகோதரிக்கா?

நாள்தோறும் நிம்மதியிழக்கச் செய்து
நித்தமும் புதுப்புது ஆணைகளிட்டு பதற்ற நோய்த்தொற்றிப் பீடித்தலையும் அபலைகளுக்கா?

பள்ளிகள் இணைப்பால்
தலைமையாசிரியர் தகுதிக் குறைப்பால்
மன அழுத்தத்தில் புழுங்கிச் சாகும்
அப்பாவி மூத்த ஆசிரியர்களுக்கா?

உரிமைக்காகக் குரல் கொடுத்து
வீதிக்கு வந்த காரணத்தால்
சிறைக்குத் தள்ளப்பட்ட
கடமைச் செயல்வீரர்களுக்கா?

ஆயிரம் இன்னல்களை
ஆட்சியாளர்கள் இழைத்து வரும்போதும்
மாணவர் நலனே மகத்தான பணியென்று மாடாக உழைக்கும் அப்பிராணிகளுக்கா?

தொண்டை கிழிய ஈட்டும்
சொற்ப ஊதியத்தில்
வீட்டுக்கடன் உள்ளிட்ட வட்டிக்குப் போக
ஈரத்துணிக் கட்டிக்கொண்டு
எஞ்சியதைப் பள்ளியில் கொட்டும்
பிழைக்கத் தெரியாத ஏமாளிகளுக்கா?

ஓய்வறியாமல் ஓடோடி ஓடோடி தேய்ந்து
இறுதிக்காலத்தில் பெண்டாட்டிப் பிள்ளைகளுடன் பெருஞ்செலவு நோய்களுடன் உயிர்ப் பிழைக்க ஓய்வூதியமும் இன்றித் தவிக்கும்
அப்பாவிகளுக்கா?

யாருக்கு நான் வாழ்த்துச் சொல்ல?...

இதுகுறித்து ஆசிரியர் மணி கணேசனிடம் கேட்டபோது, "பரிசுத்தொகை முழுவதும் தம் பள்ளி மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறுவர் இலக்கிய நூல்கள் வாங்கப்பெற்று மாணவ, மாணவியரிடம் வழங்கப்படும்" என்று கூறினார். பரிசு பெற்ற ஆசிரியரை நாமும் வாழ்த்தலாமே?!

அழைக்க: 9442965431



Join Telegram Group Link -Click Here