தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  கஸ்தூரி ரங்கன்  தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான புதிய பரிந்துரை வரைவை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்பித்தது. இது குறித்து  பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு வருகின்றது.

புதிய கல்விக்கொள்கைக்கான இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.  தேசிய கல்விக்கொள்கையின் இறுதி வரைவில், பொதுத்தேர்வில் உள்ள சவால்  நிறைந்த அம்சங்கள் நீக்கப்பட்டு, அரசு பொது தேர்வுகளில் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆண்டின் இறுதியில் மட்டும் நடத்தப்படும் பொதுத்தேர்வானது ஆண்டுக்கு 2 முறை (செமஸ்டர்) நடத்தப்படும். இதன் மூலம், ஒரே இறுதி தேர்வுக்காக படித்து வந்த மாணவர்களின் பாட சுமை குறையும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 முறை பொதுதேர்வு நடத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மனித வளமேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்படி,  தற்போதுள்ள தேர்வு மதிப்பீட்டு முறையில் உள்ள அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்பட்டு புதிய தேர்வு மதிப்பீட்டு முறைக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஈடுபட்டுள்ளது.

2020ம் ஆண்டு புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. 2022ம் ஆண்டு முதல் புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான வழிகாட்டுதல் உருவாக்கப்படும்.




Join Telegram Group Link -Click Here