சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொள்ள வசிதியாக, 'GCTP Citizen Services' என்கிற ஸ்மார்ட்போன் ஆப் (செயலி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் அதிகாரிகள் அனைவரது செல்போனிலும் பயன்படுத்தப்படும் இச்செயலி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி என்ன செய்யலாம்? எனப் போக்குவரத்து காவல்பிரிவு உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
சோதனையிடும் போக்குவரத்து அதிகாரிகள்
``போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதத் தொகை குறித்து இந்தச் செயலியில் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்களின் வாகன எண்ணை இச்செயலியில் பதிவு செய்தவுடன், அந்த வாகனத்துக்கு நிலுவை அபராதத் தொகை ஏதேனும் இருந்தால், அத்தகவலைப் பெறலாம். இந்த அபராதத் தொகையை இணையதளம் மூலமாக எப்படிச் செலுத்துவது என்பதையும் இச்செயலி விளக்கும்.
போக்குவரத்து விதிமீறல்களை நேரில் கண்டால், அவற்றை புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் மூலமாக புகாரளிக்கும் வசதியும் உள்ளது. உதாரணத்துக்கு, இரண்டு நாள்களுக்கு முன்னர் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது ஏரியாவில் நீண்ட நாள்களாக ஒரு கார் கேட்பாரற்று இருப்பதாக இச்செயலி மூலம் புகாரளித்தார். உடனடியாக, அப்பகுதி போக்குவரத்து காவல் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட காரை அப்புறப்படுத்தினர்.
GCTP செயலி
பொதுமக்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கப்பட்ட இடம், நேரம் உள்ளிட்டவற்றை, ஜி.பி.எஸ். கருவி மூலம் இச்செயலி தானாகவே பதிவு செய்து கொள்ளும். பழைய படங்களை இதில் பதிவேற்றம் செய்ய முடியாது. நேரடிக் காட்சியாக மட்டுமே பதிய முடியும். போக்குவரத்து தொடர்பான ஆலோசனைகளையும் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
காவல் அதிகாரிகளின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டால், இச்செயலி மூலமாக உயரதிகாரிகளின் கவனத்திற்கும் புகாரைக் கொண்டு செல்ல முடியும். பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட இச்செயலி பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
GCTP செயலியில் என்னென்ன வசதிகள் உள்ளன?
பொதுமக்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு செயலியை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படுவதோடு, போக்குவரத்து விதிகளும் முறையாக கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.