நாடு முழுவதும் வரும் 15ம்தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அப்போது பிளாஸ்டிக் கொடி தோரணங்கள், தனி பிளாஸ்டிக் கொடிகள், ஆடையில் அணிந்துகொள்ளும் பிளாஸ்டிக் கொடிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 1ம்தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் அனைத்து துறைக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 15ம்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் கொடிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காகிதம், துணியால் ஆன கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் அவற்றை சாலையோரங்களில் வீசிவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் பிளஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்