தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 500 தலைமையாசிரியர் பணியிடங்களும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 450 தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றால், மேலும் 50-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடம் காலியாகும் நிலை உள்ளது.

இதேபோல், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான கலந்தாய்வும் நடைபெற வேண்டிய நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் 31ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கும், குறைந்தபட்சம் 15 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில், தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், பள்ளிகளை ஆய்வு செய்தல், கற்றல் கற்பித்தல் பணி கண்காணிப்பு இல்லாமல், மாணவர் நலன் பாதிக்கப்படும். காலாண்டு தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு கலந்தாய்வை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திடும் வகையிலும், கலந்தாய்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Join Telegram Group Link -Click Here