இன்றைய உலகில், வித்தியாசமான செயல்களை மேற்கொண்டு பிரபலம் அடையும் நபர்கள் பலர். அவர்கள் செய்யும் வித்தியாசமான விஷயத்தின் காரணமாகவே, விவாதத்தின் தலைப்பாக மாறுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் விசித்திரமான நிகழ்வு ஒன்றினை மேற்கொண்டு, அம்மாநில மக்களின் விவாத தலைப்பாக மாறியுள்ளார்.

அப்படி என்ன செய்தார் அவர்?... என்னவென்று சொன்னால் நீங்கள் நம்புவது கடினம். ஆனால் அது தான் உண்மை.

ராஜஸ்தானை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது ஓய்வு நாள் அன்று, பள்ளியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கார்க் பகுதிக்கு உட்பட்ட மலாவ்லி கிராமத்தில் வசிக்கும் மூத்த ஆசிரியர் ரமேஷ் சந்திர மீனா.

ஆகஸ்ட் 31 அன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது கடைசி நாளை நினைவில் நிறுத்த, பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் முன்பதிவு செய்தார். ராஜஸ்தானில் ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்ற பிறகு ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்குள் நுழைவது இதுவே முதல் முறை ஆகும்.

பள்ளியிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ள தனது கிராமத்திற்குச் செல்ல அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் ரமேஷ் மீனா ஒரு ஹெலிகாப்டர் பதிவு செய்த விஷயம் அப்பள்ளி மட்டும் அல்லாமல் அப்பகுதி மக்களின் கவனத்தையே ஈர்த்தது.

ஹெலிகாப்டரில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்கான செலவு அவர் செலுத்திய சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த விவகாரம் தற்போது அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதப்பொருளாக உருமாறியுள்ளது.