தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. முறைகேடுகளை தவிர்க்க தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை}1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பட்டதாரிகள் எழுத உள்ளனர். மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

மேலும், முதுநிலை ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினிவழியில் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். இதேபோல், பெண்கள் "ஹை ஹீல்ஸ்' செருப்பு அணியவும், ஆண்கள் முழுக்கை சட்டை அணியவும், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தேர்வர்கள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (http://trb.tn.nic.in) தெரிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join Telegram Group Link -Click Here