இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், சமீபத்தில் வங்கி மேற்கொண்ட முக்கிய கட்டண மாற்றங்களை நீங்கள் அறிந்து கொண்டே ஆக வேண்டும்

ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளிலும், சேவைக் கட்டணத்திலும் எஸ்பிஐ வங்கி புதிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது

ஒரு வேளை நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது

ஏடிஎம்மில் பணமெடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ரொக்கம் இருக்க வேண்டும் என்பது எஸ்பிஐ வங்கியின் விதிகளில் ஒன்று

அதன்படி, ஒருவரது வங்கிக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை என்பது ரூ.25,000க்குள் இருந்தால் அந்த வாடிக்கையாளர் எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 முறையும், இதர வங்கியின் ஏடிஎம்களில் இருந்து 8 முறையும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்

அதேப்போல, ஒரு வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் மாத சராசரி தொகை ரூ.25,000க்கு மேல், ரூ.1 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம்மில் அளவிலாத பணம் எடுக்கும் வாய்ப்புகளும், இதர வங்கி ஏடிஎம்களில் கட்டணமின்றி 8 முறையும் பணமெடுக்க அனுமதிக்கப்படுவர்

அதேப்போல, நடப்புக் கணக்கில் மாத சராசரி இருப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்களுக்கு அளவில்லாத எஸ்பிஐ மற்றும் இதர வங்கி ஏடிஎம்களில் பணமெடுக்க அனுமதி வழங்கப்படுகிறது

அதே சமயம், எஸ்பிஐ நிர்ணயித்த எண்ணிக்கையை தாண்டி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து நீங்கள் பணமெடுத்தால் ரூ.10 + ஜிஎஸ்டியும், இதர வங்கி ஏடிஎம்மில் நிர்ணயித்த எண்ணிக்கையைத் தாண்டி பணமெடுத்தால் ரூ.20 + ஜிஎஸ்டியும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும்

அதே சமயம், நிர்ணயித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது, பணமெடுப்பதைத் தவிர்த்து பிற விஷயங்களை ஏடிஎம்மில் மேற்கொள்ளும் போது அதாவது பண இருப்பை பரிசோதித்தல், பின் எண்ணை மாற்றுதல் போன்றவற்றுக்கு எஸ்பிஐ வங்கியில் ரூ.5+ ஜிஎஸ்டியும், இதர ஏடிஎம்கள் என்றால் ரூ.8 + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்

உங்கள் வங்கிக் கணக்கில் பணமில்லாமல், பரிவர்த்தனை முடியும் போது அதற்காக ரூ.20+ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்

ஒரு வேளை நீங்கள் எஸ்பிஐயில், சம்பளக் கணக்கை வைத்திருந்தால், உங்களுக்கு எஸ்பிஐ மற்றும் இதர வங்கி ஏடிஎம்களிலும் அளவில்லா பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் சலுகை  நேற்று முதல் வழங்கப்படுகிறது