வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க தயார் என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.


இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 உடன் முடிவடைவதாக மத்திய அரசு கூறி இருந்தது. இதனை எதிர்த்தும், ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க தயாராக இருப்பதாக கூறியது. மத்திய அரசு பதில் பின்வருமாறு : மத்திய அரசின் 139 சேவை மற்றும் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு முறைப்படி நாளை (டிச.,08) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இதனிடையே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 6ம் தேதி வரை காலா அவகாசம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆதார் எண் கட்டாயமாக்குவதற்கு எதிரான வழக்குகள் மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.