பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாகவே இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் முதல் தாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. பள்ளி மாணவர்கள் தவிர, தனித்தேர்வர்களாக 40,682 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள 103 கைதிகள் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.

தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,756 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 278 மையங்கள் அதிகம்.
தேர்வுக்கூடங்களில் ஆள்மாறாட்டம் செய்வது, காப்பி அடிப்பது, பிட் அடித்தல் முதலான முறைகேட்டை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. முறைகேடுகளில் சிக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது என்றும் தேர்வுத்துறை ஏற்கெனவே எச்சரிக்கை செய்தது.

மாணவர்கள் தேர்வு அறைக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று தமிழ் முதல்தாள் பகல் 1.15 மணிக்கு முடிவடைந்தது. இந்த தாளில் இடம்பெற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க கூடிய வகையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.