தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களைச் சேர்க்க ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே மாதம் 18 -ஆம் தேதி வரை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி:
2017-18 -ஆம் கல்வியாண்டு முதல், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், நுழைவுநிலை வகுப்பில் ஏழை மாணவர்களுக்கான சேர்க்கைக்கு இணைய வழியில் (ஆன்-லைன்) விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வசதி ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளது. இதற்கு வரும் ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு அவசியம்: சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பு) பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், உள்ளூர் செய்தித்தாள்கள், மாவட்டக் கல்வி அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றின் தகவல் பலகைகள், தொடர்புடைய பள்ளி தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை அந்தந்த பள்ளியின் தகவல் பலகையில் ஏப்ரல் 10 -ஆம் தேதி வெளியிட வேண்டும்.
விண்ணப்பிக்க ஏற்பாடு: மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களிலும் மாணவர் சேர்கைக்கான இணைய வழி விண்ணப்பித்தலுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
கட்டணம் பெறக்கூடாது: தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியல், தகுதி இல்லாத விண்ணப்பதாரர் (நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன்) பட்டியல் ஆகியவை பள்ளித் தகவல் பலகையில் மே 21 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் மே 29 -ஆம் தேதிக்குள் தொடர்புடைய பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை அந்தந்த பள்ளிகளின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் ஏதும் பெறக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.