Tuesday, March 13, 2018

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர்சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது.

திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும்.