ஆப்பிரிக்க வேட்டைக்காரர்களின் பார்வை எப்போதும் இந்த காப்பகம் மீதே இருந்ததால், இந்த வெள்ளை ஆண் காண்டாமிருகத்திற்கு கென்ய அரசு, துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், நேற்று இந்த வெள்ளை காண்டாமிருகம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

காலில் தொற்று:
வெள்ளை காண்டாமிருகங்கள் அதிக பட்சம் 50 வருடங்கள் வரை வாழும். சூடானுக்கு 45 வயதாகி விட்டதால், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. மிகவும் நோய்வாய்ப்பட்டு, பலவீனமாக காணப்பட்ட சூடானின் சதைகள், எழும்புகள் சிதைந்தது. அதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டது, வலது காலிலும் தொற்று ஏற்பட்டு இருந்தது என ஒல் பெஜெட்டா விலங்குகள் காப்பகம் தெரிவித்துள்ளது.

2 பெண் காண்டாமிருகங்கள்:
சூடானின் மறைவால் தற்போது இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே உலகில் உள்ளது. எனவே, இனி எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்ய வைத்தே, இந்த இனத்தை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தோல்வி:
சூடானுக்கு முன் ஆங்கலிஃபூ என்னும் ஆண் காண்டாமிருகமும் கலிபோர்னியாவின் சான் டியாகோவின் பூங்காவில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டது. அதனை நோலா என்னும் பெண் காண்டாமிருகத்துடன் இணை சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அது இறக்கவும், வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களில் ஆண் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை இந்த உலகில் ஒன்று ஆனது.

காண்டாமிருகங்களின் வகைகள்:
உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மருந்திற்காக வேட்டை:
அமைதியான விலங்காகக் கருதப்படும் காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காக அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. காண்டாமிருகத்தின் கொம்புகள் கேன்சர், பக்கவாதம்,வலிப்பு நோய்கள் போன்றவற்றை குணமாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் மருந்திற்காக அவை கொல்லப்படுகின்றன. அதோடு இதன் கொம்புகள் ஆண்மையை பெருக்கும்,பாலுணர்வை தூண்டும் என கதை கட்டிவிட, சிட்டுக்குருவிகள் போல இதையும் விட்டுவைக்க வில்லை மனிதர்கள்.

வெள்ளை காண்டாமிருகங்களுக்கு பாதிப்பு:
இதன் காரணமாக, 1900-ம் ஆண்டில் 5 லட்சம் என்றிருந்த மொத்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 1970- களில் மட்டும் 70,000 என ஆனது. ஆப்பிரிக்க நாடுகள் முழுக்க இருந்த மொத்த காண்டாமிருக இனங்களின் எண்ணிக்கை இது. இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டது வடக்குப்பகுதி வெள்ளை காண்டாமிருகங்கள். காரணம் இவை மற்ற காண்டாமிருகங்களை விட கவுரவம் மிக்கதாக கருதப்பட்டதால் அதிகம் கொன்று குவிக்கப்பட்டது.

விலங்குகளின் அழிவு:
'ஏதோ ஒரு விலங்கு அழிகிறது என்று மனிதர்கள் மெளனியாக இருந்துவிடக்கூடாது. அழிந்து வரும் உயிரினத்தை காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில், விலங்குகளின் அழிவு மனிதகுலத்திற்கு மறைமுக எச்சரிகை' என சூடானின் மறைவு குறித்து எச்சரிக்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.