இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய கனவு ஆசிரியராகத் திகழ வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கனவு ஆசிரியர் என்பவர் ஆசிரியர் சமுதாயத்தில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ வேண்டியவராவார். மாணவர்களைத் தன்னுடைய பிள்ளையாக கருதி அந்த மாணவர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்று அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்கி, அவர்களுடைய தேடல்களுக்கு வடிகாலாக அமைந்திருப்பவரே 'கனவு ஆசிரியர்'.
கல்வித்துறை போன்று வேறு எந்த துறைக்கும் ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய பொறுப்பும், கடமையும் இல்லை. நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு நல்ல ஆசிரியரால்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.

குடும்பமும், பள்ளியும் மாணவர்களுக்குத் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தரும்போதுதான் அவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைய முடியும். வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். தமது குடும்பத்தில் ஒருவராக மாணவரைக் கருதும் ஆசிரியரால்தான் அந்த மாணவருக்குத் தேவையான கல்வியை சரியாக வழங்க முடியும்.
தவறு செய்வது மனித இயல்பு. பல சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும், பள்ளி வளாகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அவ்வாறு மாணவர்கள் தவறு செய்யும்போது அதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களைத் திருத்த வேண்டும். சிறிய குற்றங்களைப் பெரிதாக சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தால் விளைவுகள் வேறுவிதமாக மாறிவிடும். அதே சமயம் மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்துவிட முடியாது, கூடவும் கூடாது. மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர் சமுதாயம் நல்ல, உயர்ந்த நிலை அடைந்திருந்தால் நிச்சயமாக அதற்கு காரணமாக இருப்பது ஆசிரியர் சமுதாயமே ஆகும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பவர்களாக இருக்க வேண்டும்.


மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரை வைத்துள்ளோம். பெற்றோர்கள் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குத் தருகிறார்கள். ஆனால் உலகத்தையே மாணவர்களுக்குத் தருகிறார் ஆசிரியர். இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் பணியை சேவைப் பணியாக கருதாமல், வணிக ரீதியிலான பணியாக கருதிப் பலரும் பணிபுரிந்து வருகின்றனர்.

தாயாக, தந்தையாக இருக்கின்ற ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை தருவன. தன்னுடைய குழந்தையாக பாவிக்க வேண்டியவரே தடம் மாறிச் செல்கின்றாரே! அத்தகைய ஆசிரியர்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் பணிக்கே இழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு நல்வழிகாட்டுவது, அவர்களுடைய திறமைகளைக் கண்டறிந்து வெளிக் கொணர்வது, இவற்றையெல்லாம் செய்யாவிட்டாலும், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே தவறான வழியில் செல்கிறார்கள்.

இன்றைய திரைப்படங்கள், சமூக ஊடகங்களால் மாணவர்கள் அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போதைய கல்வி முறையில் ஒழுக்கக் கல்வியைச் சேர்த்து மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும்.

மாணவரின் தவறான செயல் ஒரு ஆசிரியரை பாதிக்காது. ஆனால் ஒரு ஆசிரியரின் தவறான செயல் ஒரு சமூகத்தையே தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஆசிரியரின் நடத்தைதான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் ஆசிரியர்களின் நடத்தை, செயல்பாடுகளின் மூலம் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்லாமல், சிறந்த பண்பாடு, ஒழுக்கம், சமூகத் தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். அதனால் ஆசிரியர் பல்துறை வல்லுநராக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஆசிரியர் கல்வியை மட்டும் வழங்குவதில்லை; மத, மொழி, ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து, அனைவரையும் மாணவர்கள் மதிக்க கற்றுத் தருபவர்கள் ஆசிரியர்கள்.

கற்பித்தல் என்பது ஒரு வகையில் கண்டறியும் கலையாகும். பலருக்குத் தங்களின் பலம் எதுவென்று கூடத் தெரிவதில்லை.
நல்ல ஆசிரியர்கள், மாணவர்களின் தனித்திறனை, பலத்தைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை விதைத்து வாழ்க்கையில் முன்னேற உதவுகிறார்கள்.

ஆசிரியர்கள் அறிவுக் கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். சமூகத்தில் அனுபவம் என்ற வெளிக்காற்றை மாணவர்களுக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். அறியாமை இருட்டைத் திறந்து அறிவு என்ற ஒளி தருபவர்கள். ஆசிரியர்கள் தங்களுடைய பெரும் கடமையை உணர்ந்து செயல்பட்டு மாணவர்களின் கனவு ஆசிரியர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்