நெட், ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (செப்.30) கடைசி நாளாகும்.

இத்தேர்வுகளை முதன் முறையாக தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இத்தேர்வுகளுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 9 முதல் 23 வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது.
அதே போன்று ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு-மெயின் (ஜே.இ.இ. - முதல்நிலைத் தேர்வு) 2019 ஜனவரி 6 முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது.
இந்த இரண்டு தேர்வுகளுக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு https://ntanet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.