சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.