ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிக அளவில் பங்கேற்று உள்ளனர். பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் வெறும் 2 ஆசிரியர்களே இருந்தனர்.

அவர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இளையதலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் நிதி இருந்தால் தான் அதிக ஊதியமும்,சலுகையும் வழங்க முடியும்.


எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் தான், அவர்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும். ஆசிரியர்களை குறை சொல்வதாக நினைக்ககூடாது நிலையை எண்ணிப்பார்த்து ஒத்துழைப்பு தர வேண்டும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற இருசக்கரமும் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மேசையின் மீது ஏறி திமுகவினர் நாட்டியம் ஆடுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுகவினரை சபாநாயகர் மன்னித்தது தான் அதிமுகவின் பெருந்தன்மை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Whats App Group link