தகுதித் தேர்வு மூலமாக 240 பார்வையற்ற பட்டதாரிகள் ஆசிரியர் பணி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

 சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில், அதிமுக உறுப்பினர் ஆர்.நடராஜ் கேள்வி எழுப்பினார். அவர் பேசியது:-

கடந்த 1994-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்த கொள்கை அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. இப்போது ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

 அதன்படி, கடந்த 2012 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை நடந்த தேர்வுகளில் 90-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்று மாற்றுத் திறனாளிகள் பலரும் ஆசிரியர் பணிக்குக் காத்திருக்கின்றனர்.

 ஆனால், 82 மதிப்பெண்கள் வரைக்கும் பெற்றாலே வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்:-

கடந்த 2012 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் 417 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு உரிய 1 சதவீத ஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் 285 ஆகும்.

தேர்ச்சி பெற்றோரில் உரிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 240 பேர். அவர்களுக்கு பாடம், இனசுழற்சி அடிப்படையில் பணித் தெரிவு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
82 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.