பிளஸ் 2 மாணவர்களின் தற்காலிக சான்றிதழில், செய்முறை மதிப்பெண் பதிவாகாததால், 6,000 மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகி உள்ளது.பிளஸ் 2 அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு, 30 மதிப்பெண்கள், செய்முறைக்காக வழங்கப்படுகிறது. 20 புற மதிப்பெண்ணாகவும், 10 அக மதிப்பெண்ணாகவும் வழங்கப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 20ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, வழங்கப்படுகிறது.இந்த மதிப்பெண் சான்றிதழ் மூலம், மாணவர்கள், கல்லுாரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கு, மே, 6 கடைசி நாள். இந்நிலையில், தற்காலிக சான்றிதழ்களில், செய்முறை மதிப்பெண் பதிவாகாமல், 'தியரி'க்குரிய மதிப்பெண் மட்டுமே இடம் பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும், இதுபோல், 6,000 பேருக்கு மேல் பதிவாகவில்லை. இதனால், மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாமலும், 'கட் ஆப்' மதிப்பெண்ணில் பின்தங்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.நிரந்தர மதிப்பெண் சான்றிதழில், விடுபட்டு போன செய்முறை மதிப்பெண்களை சேர்த்து வழங்கினாலும், ஒரு மாதத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும். அதற்குள், கலை கல்லுாரிகளில், 'கட் ஆப்' வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் தொடங்கி விடும்.'எனவே, செய்முறை மதிப்பெண் இடம் பெறாத சான்றிதழ்களில், தலைமை ஆசிரியர்களே பதிவிட்டு கையொப்பம் இட்டு வழங்க வேண்டும்' என்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here