மருத்துவப் மேற்படிப்புக்காக கலந்தாய்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது

இன்று தொடங்கிய கலந்தாய்வில் முதலாவதாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலின்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ். மற்றும் எம்.டி.எஸ்., (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் மூலம் 11,650 பேர் விண்ணப்பித்திருந்ததாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது

அவை பரிசீலிக்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் சேவையாற்றிய அரசு டாக்டர்களுக்கு மட்டும் நீட் மதிப்பெண்ணுடன் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது

இதனால் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது

அதில் மருத்துவ மேற்படிக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதலாக 10% மதிப்பெண் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  மருத்துவப் மேற்படிப்புக்காக கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது