தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு அந்தத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்க முடியாது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு வருத்தமளிக்கிறது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இந்தநிலையில் இந்த ஆசிரியர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 28,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக பள்ளிக்கல்வித் துறை பிரச்னையினை திசைதிருப்பும் முயற்சியை மேற்கொண்டுவருவது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
 தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் நிரந்தரமாகப் பணிபுரிந்ததாக பதிவில்லை. பி.எட்., படிக்காத நிலையில் கூட சில பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பிறகு பெரும்பாலான பள்ளிகளில் 9- ஆம் வகுப்புவரை அரசு பாடத் திட்டங்களை பின்பற்றவில்லை, அரசு விதித்த கட்டணங்களுக்கு மேலாகவே வசூலித்து வருவது என்பதே நிதர்சன உண்மை. எனவே பிரச்னையை திசை திருப்புவதைக் கைவிட்டு, 1,500 ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here