நவீன கம்ப்யூட்டர் இல்லாமல், பள்ளிகளில் 'டிஜிட்டல்' பணி மேற்கொள்வதில், சிக்கல் இருப்பதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு கட்டாயம் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மற்றும், 325 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, அதற்கான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.பல பள்ளிகளில், அதிநவீன கம்ப்யூட்டர் இல்லாததால், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது.

அதிநவீன கம்ப்யூட்டருடன் இணைத்தால் மட்டுமே, பல மாத வருகை பதிவு தகவல்கள் சேகரித்து வைக்க முடியும். இதற்கு அலுவலக பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடியாது.பிரத்யேகமாக இரு கம்ப்யூட்டர் வாங்க, பள்ளிகளில் நிதி இல்லை.

 20 ஆசிரியர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில், இரு கம்ப்யூட்டர்களில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரத்யேக நிதி ஒதுக்காமல், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்

அவர்களில் சிலர் கூறியதாவது:'பயோமெட்ரிக்' வருகை பதிவு செய்ய, அதிநவீன இரு கம்ப்யூட்டர் வாங்க பள்ளிகளிடம் போதிய நிதி இல்லை.

 ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யவும், 'எமிஸ்' தகவல் பதிவேற்றப் பணிகளுக்கும் தனியாக கம்ப்யூட்டர் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் வாங்குவதற்கான தொகை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இல்லை.

 தன்னார்வலர்கள் உதவியோடு, அனைத்து பள்ளிகளும், தேவையை பூர்த்தி செய்ய இயலாது.

 கம்ப்யூட்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இல்லாததால், பள்ளிகளில் டிஜிட்டல் பணி மேற்கொள்வது மிகவும் சிரமம். கம்ப்யூட்டர் வழங்கினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, கூறினர்