அரசின் கல்வி தொலைக்காட்சி சேனல் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ரோபோடிக்ஸ் கல்வி, அனிமேஷன் திருக்குறள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மே இறுதியில் சேனல் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிகட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படும் முன் மேமாத இறுதியில் தொலைக்காட்சி சேனலை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சேனலில் கல்வி சார்ந்த பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன், தனியார் சேனல்களுக்கு நிகராக ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


 கல்வி தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பதளம் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் 8-ம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக 5 முதல் 10 ஆசிரியர்களை ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்து ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த சேனலில் 80 சதவீதம் கல்விக்கும், மீதமுள்ள 20 சதவீதம் மாணவர்கள் தனித் திறன்களை வளர்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் பாடத்திட்டத்துடன் இணைந்த நிகழ்ச்சிகளாக இருக்கும். உதாரணமாக பாடங்களை புதிய உத்தியுடன், எளிய முறையில் கற்றுதரும் ஆசிரியர்களின் விளக்கங்கள் சேனல் மூலம் ஒளிபரப்பப்படும். இதற்காக மாநிலம் முழுவதுள்ள சிறந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.

தொடர்ந்து நலமே வளம், உயிர்த்துளி உட்பட 17வகையான நிகழ்ச்சிகள் தினமும் 3 முறை என 24 மணி நேரம் ஒளிபரப்பாகும். அதில் குழந்தைகளைகவரும்படி அனிமேஷன் திருக்குறள், மாணவர்கள்ஆங்கில அறிவை மேம்படுத்த ஈசி இங்கிலீஷ் போன்ற பெரியளவில் வரவேற்பை பெறும். மேலும், பாடம் மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த மாணவர்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள், கல்வியாளர்கள் மூலம் விளக்கம் தரப்படும்.இதுதவிர, மாணவர்களின் தனித்திறனை வளர்க்க நன்றாக பாடுபவர்களுக்கு கிரீடம் இசை நிகழ்ச்சியும், பேச்சில் சிறந்தவர்களுக்கு பேசப்பேச தமிழ் அழகு நிகழ்ச்சியும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரங்கேறும். இதில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள்தரப்படும். இதன்மூலம் அனைத்து திறமையுள்ள மாணவர்களுக்கும் சாதிப்பதற்கான தளம் எளிதாக கிடைக்கும்.இதுதவிர அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் கல்வி சேனலை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒளிபரப்பை சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் கண்டு பயன்பெறுவர். மாலையில் மறுஒளிபரப்பு செய்வதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வி சேனலை பார்க்கலாம். நீட் உட்பட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீன கல்விமுறை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இதனுடன் மாணவர்களுக்கு பயனுள்ள அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித்தொகைகளுக்குவிண்ணப்பிக்கும் முறை, மாணவர்கள் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதன்மூலம் கல்வித்துறையின் அனைத்து செயல்பாடுகளையும்மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனே அறிய முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here