சென்னை: தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் இலவசமாக, 81,000 ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான, 25% இடஒதுக்கீட்டு சேர்க்கை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். நடப்பு கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கு, இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22 துவங்கி மே 18 வரை நடைபெற்றது.

இதில் 1, 20,000 பேர் விண்ணப்பித்தனர். இதில் தகுதியற்ற 7,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

எஞ்சியிருந்த 1.13 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு சேர்க்கைக்கு பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் டிஜிஇ எனப்படும் ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளி மற்றும் எச்ஐவி பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின்கீழ் கடந்த மே 31 அன்று சேர்க்கை வழங்கப்பட்டது.

அதேபோல், 25 % ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவான விண்ணப்பங்கள் வந்த 3,000 பள்ளிகளில் உள்ள இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பித்த 30 ஆயிரம் பேருக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வாகும் குழந்தைகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும். இலவச சேர்க்கை பெறும் மாணவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தவேண்டாம்.

இவர்களுக்கான கட்டணத்தை அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் 1.21 லட்சம் இடங்களுக்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், இதில் தகுதியான 81,000 பேருக்கு மெட்ரிக் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here