தமிழகத்தில் ஒரு மாணவர்கூட இல்லாத 45 பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றம் பெற இருப்பதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:

தங்கம் தென்னரசு: மாணவர்கள் இல்லாததால் 1,248 பள்ளிகள் மூடப்பட்டு அவை நூலகங்களாகச் செயல்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர் நலன்கள் பாதிக்கப்படும். எனவே, பள்ளிகள் தொடர்ந்து அங்கேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: தமிழகத்தில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட சேர்க்கை இல்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, சேர்க்கை இல்லாத பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அந்தப் பள்ளிகள் மூடப்படாது. அதேசமயம், எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்க விரும்புகிறேன். ஒரு மாணவர்கூட இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களை அமர்த்தினால் என்ன பயன் ஏற்படும்.

எனவேதான் அவை நூலகங்களாக மாற்றப்பட்டு அங்கு தற்காலிக நூலகர்களை நியமிக்க அரசு பரிசீலித்து வருகிறது. பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஒன்று முதல் ஒன்றரை கிலோமீட்டர் தூரமுள்ள அருகேயுள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர். இதன்மூலம், இரண்டு ஆசிரியர்கள் என்ற எண்ணிக்கை நான்காக உயர்ந்து அந்தப் பள்ளிகளை மேலும் சிறப்பாக நடத்த அரசு பரிசீலிக்கிறது என்றார்.

Dailyhunt

Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here