எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூலை 6) வெளியாகும். வரும் திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைந்தது.
அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ஆம் தேதியே வெளியிடப்படுவதாக இருந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி அப்பட்டியல் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 6-ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது; சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி நடைபெறும்; பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றார்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here