முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2018-19 ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கானத் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் இந்த தேர்வு ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணினி ஆசிரியர்களுக்கானத் தேர்வை மட்டுமே ஆன்லைன் வழியாக நடத்த வேண்டும்.

கணினி பயிற்சி இல்லாத பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்துவது ஏற்புடையது அல்ல. நான் எம்.காம்., பி.எட். படித்துள்ளேன். என்னைப் போன்று பலருக்கு கணினி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதுவது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்த ஆன்லைன் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த எழுத்துத் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். 
இந்த மனு, நீதிபதி வி. பார்த்திபன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here