30 கிராம் எடையில் நீர் செயற்கைகோள் - 30-ஐ (வாட்டர் சாட் - 30) கண்டுபிடித்த கரூர் மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பை, சந்திராயன் 1 செயற்கைக்கோளின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியிருக்கிறார். அதோடு, அந்த செயற்கைகோள் ராட்சத பலூன் மூலம் 15 கிலோமீட்டர் உயரத்துக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
நீர் செயற்கைகோளுடன் மாணவர்கள் மற்றும் தனபால்
'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறிய அளவிலான செயற்கைகோளை ராட்சத பலூன் உதவியுடன் விண்ணில் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கும் திட்டம் முதல் கட்டமாக ஆகஸ்டு 11-ம் தேதி நிகழ உள்ளது' என சந்திராயன்- 1 திட்ட இயக்குநரும், விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் முன்பு தெரிவித்திருந்தார். இதற்கான போட்டியாக, `30 கிராம் எடையில் உள்ள ஒரு செயற்கைகோளை 5 மாணவர்கள் கொண்ட குழு தயாரித்து அனுப்ப வேண்டும்' என ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆசிரியர் தனபால் மயில்சாமி அண்ணாதுரையுடன்
இதைத் தொடந்து, கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9-ம் வகுப்பு பயிலும் சி. நவீன்குமார், கோ.சுகந்த், கு.பசுபதி, மு.விஷ்ணு, சு.ஜெகன் (8-ம் வகுப்பு) ஆகிய மாணவர்கள், தங்களின் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலுடன் அத்தகைய செயற்கைகோளை தயாரிக்க களத்தில் குதித்தனர். இன்று சமுதாயத்தில் நிகழும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னையான நீர்பற்றாக்குறை , நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, விவசாய நிலங்களின் மண் வளம் பாதிப்பு, நீர், ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கும் பரவியிருக்கும், வெட்ட வெட்ட மீண்டும் வளரும் ப்ரோசோபிஸ் ஜுலிபுளோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சீமைக்கருவேலமரம் குறித்த தங்கள் ஆய்வை மேற்கொள்ளும் விதத்தில், 3.5 செ.மீ கன சதுரம் கொண்ட கலனில் 30 கிராம் செயற்கைகோளை வடிவமைத்து, அதற்கு நீர் செயற்கைகோள் - 30, (வாட்டர் சாட் - 30 , ws_30) என பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர் தனபாலிடம் பேசினோம்.``இந்த செயற்கைகோளைப் பார்த்து வியந்ததோடு, நேற்று (3.8.2019) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிவியல் பலகை நிகழ்ச்சியை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றிய இஸ்ரோ துணைக் கோள் மைய முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, `அறிவியல் கருத்துகளை, தமிழ் மொழியில் மக்களிடமும், மாணவர்களிடமும் எடுத்துச் செல்வதன் நோக்கம்தான் அறிவியல் பலகை திட்டம். இதன்மூலம், 9வது திசையான ஆகாயத்திலும் அறிவியல் பரவ வேண்டும். நிலத்திலும், நிலவிலும், விண்வெளியிலும் அறிவியலை விதைப்போம். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழகத்தைச் சார்ந்த 12 அரசுப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பான 30 கிராம் அளவிலான செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளோம்' என்று பாராட்டிப் பேசினார். அறிவியல் பலகை கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, கரூர் மாவட்டத்திலிருந்து நானும், ஆசிரியர் மனோகர் என்பவரும் தேர்வுபெற்று, பங்கேற்கச் சென்றிருந்தோம்.
ஆசிரியர் தனபால்
எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த 30 கிராம் நீர் செயற்கைகோளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சாரிடம் காண்பித்தேன். வெள்ளியணை, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் செயல்பாட்டை அவர் பெரிதும் பாராட்டினார். மேலும், 'அரசுப் பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைகோளை (30 கிராம்) ராட்சத பலூன் உதவியுடன் சுமார் 15 கி.மீ உயரத்துக்கு விண்ணில் செலுத்தவும், செயற்கைகோள் செயல்பாட்டையும், அது அனுப்பும் படம் மற்றும் சமிக்ஞைகளை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் நிஜமான விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதற்கான உத்வேகம் கிடைக்கும்' என பாராட்டி வாழ்த்தினார். அதோடு, வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர்கள் தயாரித்த ws - 30 செயற்கைகோளில் கையொப்பமிட்டார். அதோடு, அவருடன் அருகில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ளவும் அனுமதித்தார். அவரின் பாராட்டுகளும், வாழ்த்துகளும் வெள்ளியணை, அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த பரிசாக நான் கருதுகின்றேன். இந்த உத்வேகத்தில் எங்கள் மாணவர்கள் இன்னும் பல அறிவியல் சாதனைகள் புரிவார்கள்" என்றார்.