தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் இதுவரை 65 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக, தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆங்கில வழிக் கல்வி, சீருடை ஆகியவற்றால் ஈர்க்கப்படும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளில் பல்லாயிரம் ரூபாய்களை செலவழித்து வருகின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை குறைத்து வருகின்றனர். 
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் முதல் கட்டமாக 2,381 நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளை தமிழக அரசு நிகழாண்டு தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள், இலவச கற்றல் உபகரணங்கள், கல்விக் கட்டணம் இல்லை போன்ற காரணங்களால் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். 
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: 
ஒவ்வொரு பள்ளிக்கும் மழலையர் வகுப்புக்கு என ஒரு கற்றல் கருவிப் பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். பெற்றோரிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
வழக்கத்தை விட, இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2,381 அங்கன்வாடி மையங்களில் இதுவரை 65 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அடுத்த கல்வியாண்டில் மேலும் 3 ஆயிரம் மையங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். 
நிகழாண்டில் கடந்த ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட போது, குழந்தைகள் சேர்க்கை 52 ஆயிரமாக இருந்தது. தற்போது இரு மாதங்களில் கூடுதலாக 13 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.