சுதந்திர தின விழாவின்போது, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்' என,
உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதம்:அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், வரும் 15ம் தேதி, சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். பள்ளி, ஒன்றிய அளவில், மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும்.சுதந்திர தினத்தன்று, அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்று நட வேண்டும். இதற்கான இடங்களை தேர்வு செய்து, முறையாகப் பராமரிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வனத்துறையுடன் தொடர்பு கொண்டு, மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று நட வேண்டும்.பள்ளி வளாகம் வண்ணக்காகிதம், மலர்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், காலை, 9:30 மணியளவில் தேசியக்கொடியேற்றி, சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும். அறிவியல் கண்காட்சியை நடத்தலாம். கிராமக்கல்வி உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், தியாகிகளை விழாவுக்கு அழைக்க வேண்டும்.இதேபோல், கல்வி அலுவலகங்களிலும், அனைத்து பணியாளர்களும், விழாவில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.