புதுக்கோட்டை,ஆக.1: அரிமளம் ஒன்றியத்தில்  உள்ள இரண்டு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வினை மேற்கொண்டனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் அரிமளம் ஒன்றியத்தில் இரண்டு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளிகள் உள்ளது.

இப்பள்ளிகளில்  திடீர் ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி அவர்கள் மாணவர்களிடம் சொல்வதை எழுதும் பயிற்சி அளித்தார்கள்.பின்னர் மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.பின்னர் மாணவர்களிடம் இடைநின்றதற்கான காரணத்தை கேட்டறிந்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக  மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரிமளம் மேல்நிலைப்பள்ளியையும் பார்வையிட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள் .

பின்னர் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் நடைபெற்ற  மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு முகாமினை தொடங்கி வைத்துப் பேசியதாவது: மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை பெற்றவர்கள் எந்த வித வருத்தமும் கொள்ளக் கூடாது.மாற்றுத் திறன் குழந்தைகள் மனம் சந்தோசப்படும் படி  பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை பெற்றோர் உதாசீனப்படுத்தக் கூடாது.மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் பல நல்ல திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு அரசின் சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும்.மேலும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை பெற்றோர்கள்  முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

முகாமில் மருத்துவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் வெங்கடேஷ்,மஞ்சு,முத்தமிழ்ச் செல்வி,ஷமீனா ஆகியோர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் ,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், அரிமளம் வட்டாரக் கல்வி அலுவலர் ஞானக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.


முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய பயிற்றுநர் ரோஜா தலைமையில்,வட்டார வளமைய பயிற்றுநர்கள்,இயன்முறை மருத்துவர்கள் செய்திருந்தார்கள்.

Join Telegram Group Link -Click Here