அனைத்துப் பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
சென்னை, தருமபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறையினர், பூச்சியியல் வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் அருகில் அமைந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காய்ச்சலை பரப்பும் வகையில், குப்பைகள், உடைந்த தொட்டிகள், நீர் தேங்கும் வகையிலான பொருள்கள் போன்றவை இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இது போன்ற பொருள்களை உடனடியாக அகற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்வதுடன் பள்ளி வளாகங்கள், பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேவேளையில் பள்ளிகளில் உள்ள வாளிகள், தண்ணீர் தொட்டிகள், கழிவறைகள், குடிநீர் குழாய்கள், கட்டடங்கள் போன்றவற்றை கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் உடனடியாக தூய்மைப் படுத்த வேண்டும்.
டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
காய்ச்சலுடன் வந்தால்...: பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ, பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டாலும் அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவர்கள் அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தெரிவித்து பின்னர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்



Join Telegram Group Link -Click Here