ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி -மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணிஆணை , ஊதிய உயர்வு , அடிப்படை பணிச்சலுகைகள்  வழங்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு...!


மாற்றுத்திறன் மாணவர்களுக்கான 2196 சிறப்பு பயிற்றுநர்களுக்கு தீபாவளி பண்டிகை நாட்களுக்கு முன்பாகவே மாநில திட்ட இயக்குநர் அவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை நிதி தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு பெற்றுதந்த (SS IE PAB 2019-20) ஊதிய உயர்வினை நிர்வாக குழு கூட்டத்தில் விவாதித்து செயல்முறைகள் மூலமாக ஆணை பிறப்பிக்க மற்றும்  பணி நிரந்தர ஆணை அல்லது குறைந்தபட்சம் தொகுப்பூதிய தற்காலிக பணிஆணை மற்றும் அடிப்படை பணிச்சலுகைகள் அளித்து வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்பார்ப்பு தற்சமயம் நிலவி வருகிறது.
தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் சிறப்பு பயிற்றுநர்கள் 1998 முதல் தொகுப்பூதிய தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்...
1998 முதல் 2002 வரை மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் (DPEP-District Primery Education Project) மூலமாக பணிபுரிந்து வந்தனர்..
2002 முதல் 2012 மே மாதம் வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் ( SSA-Sarva Shiksha Abhiyan ) வாயிலாக தொண்டு (NGO) நிருவனங்களின் மூலமாக பணிபுரிந்து வந்தனர்.
NGO-க்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த காரணமாக 2012 ஜீன் மாதம் தொண்டு நிறுவனங்களை தமிழக அரசு அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை வட்டார வள மையங்களில் பணியமர்த்தியது.
ஆனால் அப்போது எவ்வித பணியேற்பு ஆணையும் வழங்கப்படவில்லை.
MHRD வழிக்காட்டுதல் படி 2015 ஆண்டு ஜீன் மாதம் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.
ஆனால் எவ்வித பணி மாறுதல் ஆணையும் வழங்கப்படவில்லை.
தற்போது 2019 முதல் (SS-Samagra Shiksha) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக அரசுப்பணிகளை சிறப்பாக செய்து கொண்டு வந்தாலும் பணிஆணை வழங்கப்படாத காரணத்தால் கீழ்க்கண்ட அடிப்படை பணிச்சலுகைகள் மறுக்கப்படுகிறது.
1.தொடர் தற்செயல் விடுப்பு இல்லை.
2.மத விடுப்பு இல்லை.
3.தீபாவளி முன்பணம் ₹.10,000 இல்லை , பொங்கல் போனஸ்  ₹.1,000 சிறப்பு அரசாணை வெளியிட்டால் மட்டுமே உண்டு  மற்றபடி இல்லை.
4.ஊதிய உயர்வு இல்லை.
5.தனியார் நிருவனங்களுக்கு உத்தரவிடும் அரசாங்கம் 2196 பேருக்கு EPF வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வது இல்லை.
6.மருத்துவ காப்பீடு இல்லை.
7.பணிவரண்முறை கிடையாது.
8.வங்கி கணக்கில் ஊதியம் இல்லை.
9.EMIS வலைதளத்தில் பணியாளர்கள் விபரங்கள் இல்லை.
10.வங்கி லோன் இல்லை.
11.பணியாளர் (Staff Identity Card) அடையாள இல்லை.
12.பணிமாறுதல் இல்லை / பணிச்சான்று கூட அளிப்பது இல்லை.
13.ஊர்திப்படி ₹.1000 மாற்றுத்திறனுடைய சிறப்பு பயிற்றுநர்களுக்கு இல்லை.
14.பள்ளி மற்றும் பி.ஆர்.சி அலுவலகம் சனிக்கிழமை விடுமுறை நாட்கள் என்ற போதும் கூட வீட்டுப்பயிற்சி செல்ல நிர்பந்தம்.
15.பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார வள மையத்தில் பொறுப்பு மேற்பார்வையாளர் என்ற இரட்டை தலைமை முறையால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் நிலவி வருகிறது.
சேவைப்பணி தொண்டுள்ளம் கொண்ட எங்களுக்கு மட்டுமே தொடர்ந்து இல்லை இல்லை இல்லை என்ற பதில் பேரிடியாகவும் அதிர்ச்சியாகவும் வருகிறது.
ஆனால் இதுவே  எங்களுக்கு பின்னர் பணியில் சேர்ந்த  மற்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட பணியாளர்களுக்கு மட்டும் இச்சலுகைகள் அனைத்தும் தாராள மனப்பான்மையோடு வழங்கப்படுகிறது.
தமிழக அரசு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்து சலுகைகள் வழங்காமல் புறக்கணிப்பு செய்து வருகிறது.
இதனால் ஒரே பணித்தளத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை தேவையில்லாத மனக்கசப்புகளை வேதனைகளை அனுதினமும் ஏற்படுத்துகிறது.
பணிஆணை குறித்து Tamilnadu CM Special Cell Petition Reply வலைதளத்தில் கேட்டமைக்கு ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் பணிஆணை வழங்கியுள்ளது. எனவே மீண்டுமாய் இன்னொரு பணிஆணை வழங்க வேண்டியதில்லை என்ற மழுப்பலான தகவல்களை சமாளிப்பை பதிலாக வழங்கியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.
அரசு துறைகளில் சாதாரண பணியாளர்களுக்கு கூட பணிஅங்கீகாரம் என்ற மதிப்பை வழங்கும்போது மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என சேவைப்பணி செய்து வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு குறைந்தபட்சம் தொகுப்பூதிய தற்காலிக பணிஆணை மற்றும் ஊதிய உயர்வு , அடிப்படை பணிச்சலுகைகள் கூட  வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது மிகவும் மனவேதனையை ஏற்படுகிறது.
பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் ஆகிய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களின்  கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர், ஆளுநர், கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித் துறை செயலாளர் , மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், தலைமை செயலாளர் , நிதித்துறை அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்..
சமீபத்தில் டி.பி.ஐ வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் தலைவர் தீபக் , அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், தொல்.திருமாவளவன் , சீமான் , ஜி.கே.வாசன் ,ஏ.கே.மூர்த்தி, பழ.நெடுமாறன், முத்தரசன், பால கிருஷ்ணன் , மல்லை சத்யா, எல்.கே.சுதீஷ் , வெற்றிவேல் , ஆகியோர் நேரில் சந்தித்து பணிஆணை வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உமிழ்நீர் கட்டுப்படுத்தும் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம், அதீத துறுதுறு செயல்பாடுகள்  கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய போற்றுதலுக்குரிய சிறப்பான பணி காரணமாக பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள்  பொதுமக்கள் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி  சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்..
பிற மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மாத ஊதியம் டெல்லியில் 41750 , ஆந்திராவில் 21000 , மகாராஸ்டிராவில் 30759 , கர்நாடகாவில் 20000 , புதுச்சேரியில் 20000 , கேரளாவில் 27000 , ஹாரியானாவில் 42409 , ஆனால் தமிழ்நாட்டில் 14000 மட்டுமே வழங்கப்படுகிறது என்பது வருத்தத்திற்கும் வேதனைக்குரியது..
நாடு முழுவதும் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒருங்கிணைந்த கல்வி - (SAMAGRA SHIKSHA) என்ற பெயரில் ஒரே மாதிரியான செயல்பாடுகள் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளதென்பது பாரபட்சமான நடவடிக்கை சட்டவிரோத நடவடிக்கையாக உள்ளது.
ஆந்திரா , கேரளா , டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களை மாநில அரசு பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 2196 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை தமிழகஅரசு பணிநிரந்தரம் செய்ய 79 கோடி தேவையென நிதித்துறை மூலமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது..
எனவே 2196  சிறப்பு பயிற்றுநர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய 45 கோடி நிதியினை மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.
பள்ளிக்கல்வி துறையில் மற்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி ஆணை மற்றும் அடிப்படை பணிச்சலுகைகள் வழங்கி வரும் தமிழக அரசு கடந்த 21 ஆண்டுகளாக (1998 to 2019) லட்சக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கருணையோடு, தொண்டுள்ளத்தோடு சொற்ப ஊதியத்தில் எவ்வித அடிப்படை பணிச்சலுகையின்றி பணித்தளத்தில் உரிய அங்கீகாரம் கூட இல்லாமல் தற்காலிகமாக சிறப்பு பயிற்றுநர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
தமிழக அரசு 21 ஆண்டு பணிக்காலத்தை கனிவோடும் கருணையோடும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுகோள் வைக்கின்றோம்.
தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக ஆணை பிறப்பித்து சிறப்பு பயிற்றுநர்களுக்கு தீபாவளி பண்டிகை நாட்களுக்கு முன்பாகவே மாநில திட்ட இயக்குநர் அவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை நிதி தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு பெற்றுதந்த ஊதிய உயர்வினை செயல்முறைகள் மூலமாக ஆணை பிறப்பிக்க மற்றும்  பணி நிரந்தர ஆணை அல்லது குறைந்த பட்சம் தொகுப்பூதிய தற்காலிக பணிஆணை மற்றும் அடிப்படை பணிச்சலுகைகள் அளித்து வாழ்வாதாரம் காத்திட வேண்டும்.
இவ்வாறு தமிழ் நாடு - ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு விடுத்துள்ளார்.



Join Telegram Group Link -Click Here