தமிழகத்தில் சமீபகாலத்தில் அரசு பணி ஆசையின் காரணமாக மோசடி பேர்வழிகளிடம் லட்சக்கணக்கான பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், மாநில வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு இதில் பி.ஏ படித்தவர்கள் 4 லட்சத்து 31 ஆயிரத்து 561 பேரும், பிஎஸ்சி படித்தவர்கள் 5 லட்சத்து 82 ஆயிரத்து 699 பேரும், வணிகவியல் படித்தவர்கள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 909 பேரும், பொறியியல் படித்தவர்கள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 950 பேரும், மருத்துவம் படித்தவர்கள் 2 ஆயிரத்து 302 பேரும், வேளாண்மை படித்தவர்கள் 6 ஆயிரத்து 815 பேரும், பிஎல் படித்தவர்கள் 2 ஆயிரத்து 117 பேரும் அரசு வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.


பதிவு செய்துள்ளவர்களில் 24 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 27 லட்சத்து 30 ஆயிரத்து 524 பேர், 36 வயது முதல் 57 வயது வரையில் உள்ளவர்கள் 11 லட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் உள்ளனர். இதில் பதிவு செய்துவிட்டு 58 வயதை தொட்டவர்கள் 7 ஆயிரத்து 761 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு வரையில் 79 லட்சத்து 44 ஆயிரத்து 97 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் 8 லட்சத்து 18 ஆயிரம் பேர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் பணி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.
இதனால் அரசு பணிக்காக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் சொற்ப அளவிலான காலிப்பணியிடங்களுக்கே பல லட்சம் பேர் போட்டி போடும் நிலை தற்போது நிலவி வருகிறது. இப்படி அரசு பணியில் போட்டிகள் அதிகரிக்க முக்கிய காரணியாக இருப்பது பணி பாதுகாப்பு, அதிக சம்பளம், குறிப்பிட்ட கால பணி நேரம் போன்றவையாக உள்ளது.இதன் காரணமாக அரசு பணிகளை போட்டித் தேர்வுகள் எழுதி, நியாயமான முறையில் பணியில் சேருவதைவிட, ஒவ்வொரு துறையிலும் பணம் கொடுத்து பணியில் சேர்ந்து விடலாம் என்ற தவறான பாதைக்கு இளைஞர்கள் செல்ல தொடங்கிவிட்டனர்.
இதில் அரசு பணியில் சேர வேண்டுமென்றால் ₹2 லட்சம் தொடங்கி ₹10 லட்சம் வரையில் பணிக்கு ஏற்றார் போல் பேரம் பேசி, தமிழகம் முழுவதும் கும்பல் ஏமாற்றி வருகிறது. இதில் ஒரு சில அரசு ஊழியர்களும் அரசு பணி பெற்றுத்தருவதாக கூறி பணம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.


இதில் வேலூர் கலெக்டர் அலுவலகத்திலேயே அலுவலக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களிடம் ₹4 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு வெள்ளை நிற சீருடை வாங்கிக் கொடுத்து முதியவர் ஏமாற்றினார். மேலும் தினமும், ராணுவத்தில் வேலை, ஆசிரியர் வேலை, மின்வாரியத்தில் வேலை என்று பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக தினமும் காவல்நிலையங்களில் புகார் அளிக்க வருவது தொடர்கதையாக உள்ளது.
இப்படி தமிழகம் முழுவதும் தினமும் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்துவிட்டனர் என்று காவல் நிலையங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் அளிக்க காத்துக்கிடப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாகவே உள்ளனர் என்பதுதான் வேதனை.இதில் சில அரசியல் புள்ளிகளும் வேலை வாங்கித்தருவதாக ஆசைகாட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
சில கும்பல் அமைச்சர்கள் பெயரையும், அரசியல்வாதிகள் பெயரையும் கூறி, பணம் பறித்து வருகின்றனர். அரசு வேலை ஆசையில் பட்டதாரிகளும் பல லட்சங்களை இழந்து வருகின்றனர். இத்தகைய மோசடி பேர்வழிகளிடம் படித்த இளைஞர்கள் ஏமாறும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


Join Telegram Group Link -Click Here