புதுக்கோட்டை,நவ.22:புதுக்கோட்டையில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் 20 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கலந்தாய்வு மூலமாக  பணி நியமன ஆணையினை வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலை சிறப்பு விதிகளின்படி 2012 -2013 முதல் 2015- 2016 வரையிலான ஆண்டுகளில் ஏற்பட்ட தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாளர்களை தேர்வு செய்ய போட்டித் தேர்வானது கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில்   நடைபெற்றது..அப்போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்  என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) சு.நாகராஜமுருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி புதுக்கோட்டை  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாக கட்டிடத்தில்  நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகள் பெற்ற தையல் ஆசிரியர்கள் 7 பேர் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் 13 பேர் என மொத்தம் 20 ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வழங்கி ஆசிரியர் களின் பணி சிறக்க வாழ்த்தினார்.. இந்நிகழ்வின் போது மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலைக்கல்வி) கபிலன் உடன் இருந்தார்.
கலந்தாய்வில் கலந்துகொண்டு விருப்பப்பட்ட இடங்களைத்தேர்வு செய்து பணி நியமன ஆணையினை பெற்ற தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் அனைவரும்  கவந்தாய்வு மூலமாக பணி இடங்களை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கச் செய்து தங்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய தமிழக அரசிற்கும்,பள்ளிக்கல்வித்துறைக்கும்  தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.