புதுக்கோட்டை,நவ.19: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வும்,இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்விற்கான  கலந்தாய்வும் புதுக்கோட்டை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கலந்தாய்வுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் கே.எஸ்.ராஜேந்திரன்(புதுக்கோட்டை), கு.திராவிடச்செல்வம்(அறந்தாங்கி), எஸ்.ராஜேந்திரன் (இலுப்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கலந்தாய்வில்  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தலைமையாசிரியர் பணி மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்த 189 ஆசிரியர்களில் 108  கலந்து கொண்டனர். இதில் 26 பேர் பணிமாறுதல் பெற்றுச் சென்றனர்.அதே இடைநிலை ஆசிரியர்களில் தகுதி வாய்ந்த 26 பேர் தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற்றனர்.
 பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு  வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு  ஆணைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வழங்கினார்.

 இதேபோன்று புதன்கிழமை (நவ.20) அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியம் மற்றும் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வும், (நவ.21) வியாழக்கிழமை அன்று பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கான கலந்தாய்வும் நடைபெறும்.