புதுக்கோட்டை,மார்ச்.11:தற்போது அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தும், அச்சத்திலிருந்தும் மக்களை, குறிப்பாக மாணவர்களை மீட்க கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதிஷ்குமார் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:உலகெங்கும் தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிறியவர்களிடம் தொடங்கி
பெரியவர்கள்
வரை அனைவரிடமும் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக,ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி, அனைத்து மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
நமது மாநிலத்தைப் பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வெகுசிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்கூட,
பொதுமக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
ஊடகங்கள் வழியாகவும், பத்திரிகைகள் வழியாகவும் பல்வகையான விழிப்புணர்வு செய்திகள் பரவிவரும் வேளையில், தற்பொழுது பள்ளிக்கல்வித் துறை மூலமாக ஒரு விழிப்புணர்வு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது.
அதில் அடிக்கடி தும்மல்,இருமல் வருகின்ற மாணவர்களை மற்ற மாணவர்களோடு இணைந்திருப்பதை தவிர்க்கவும்,
உடல்நலமில்லாமல் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சரியான நடவடிக்கை என்றாலும் கூட, மாணவர்களிடையே இது மிகுந்த மன உளைச்சலையும் குழப்பத்தையும்
ஏற்படுத்தி விடும். ஏனெனில் பெரும்பகுதி மாணவர்களுக்கு இருமல், தும்மல் என்பது இயல்பாகவே இருக்கின்றது. இவ்வாறான சூழலில் எது சாதாரணமானது, எது பாதிப்பிற்குரியது என்பதைக் கண்டறிவது கடினமாகவும் இருக்கும்.
மேலும் அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் மாணவர்களை பிற மாணவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.இது மனரீதியாக வெகுவாக குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் வயது பிள்ளைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகளது உயிர்களுக்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல. வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கிணங்க நமது மாநிலத்திலும் மார்ச் 31 வரை விடுமுறை வழங்கி குழப்பத்தையும் பதட்டத்தையும் போக்கிட வகை செய்யும்படி கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..