இந்தியர்கள் இடையே தற்போது வைரலாக பரவி வரும் ஃஸூம் (ZOOM) செயலி பாதுகாப்பானது கிடையாது, அதில் நிறைய குறைபாடுகள் உள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லி: இந்தியர்கள் இடையே தற்போது வைரலாக பரவி வரும் ஃஸூம் (ZOOM) செயலி பாதுகாப்பானது கிடையாது, அதில் நிறைய குறைபாடுகள் உள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் அலுவலக மீட்டிங் மற்றும் ஆலோசனைகளை ஃஸூம் (ZOOM) செயலி மூலம் நடத்துகிறார்கள். ஃஸூம் (ZOOM) செயலி என்பது ஒரு வீடியோ கான்பிரன்ஸ் செயலி ஆகும்.

இதில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை வீடியோ கான்பிரன்ஸ் செய்ய முடியும். அலுவலகங்களில் மட்டுமின்றி பள்ளிகளிலும் கூட மாணவர்களுக்கு ஃஸூம் (ZOOM) செயலி மூலம் பாடம் எடுக்கப்படுகிறது.


ஹேக்கிங் நடந்தது
இந்த நிலையில்தான் ஃஸூம் (ZOOM) செயலியில் சில வாரங்கள் முன் ஹேக்கிங் நடந்தது. உலகம் முழுக்க மொத்தம் 60 ஆயிரம் கணக்குகள் வரை இதில் ஹேக் செய்யப்பட்டது. இந்த கணக்குகள் எல்லாம் ஹேக்கர்கள் இருக்கும் தளங்களில் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட பலருக்கு இந்த கணக்கு திருடப்பட்டுள்ளது. மிக எளிதாக ஹேக்கர்கள் இந்த கணக்குகளை திருடி உள்ளனர்.


முக்கியமான தகவல்களை திருடும்
இந்த ஃஸூம் (ZOOM) கணக்குகள் மூலம் மக்களின் இமெயில் ஐடியை கூட திருட முடியும். அதேபோல் அவர்கள் தங்கள் வலைத்தளத்தில் சேவ் செய்து வைத்து இருக்கும் பாஸ்வேர்டுகளை திருட முடியும். அவர்களின் அலுவலக கணக்குகளை திருட முடியும். சில கணினிகளின் கேமராக்களை கூட இந்த திருடப்பட்ட கணக்குகள் மூலம் இயக்க முடியும் என்று புகார் வைத்துள்ளது. புளோரிடா பல்கலைக்கழகம் உட்பட 290 முக்கியமான பல்கலைக்கழகங்களின் கணக்குகளும் இப்படி திருடப்பட்டுள்ளது.


தடை விதித்தது
இதையடுத்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஃஸூம் (ZOOM) செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் பள்ளிகள் மூலம் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் இந்த செயலியை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்தது. அதேபோல் உலகம் முழுக்க பல ஐடி நிறுவனங்கள் இந்த செயலியை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டது.


விதிகளை மாற்றியது
இதையடுத்து பதறிய ஃஸூம் (ZOOM) நிறுவனம் தனது செயலியில் புதிய அப்டேட்களை முடக்கியது. அதோடு தங்கள் செயலியில் புதிய பாதுகாப்பு வசதிகளை சேர்த்தது. மேலும் ஒவ்வொரு முறை லாகின் பாஸ்வேர்ட் மாற்றும் வசதி, புதிய புதிய குருப் ஐடி வசதிகளை கொண்டு வந்தது. இதன் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது .


இந்தியாவிலும் கட்டுப்பாடு
இந்த நிலையில் தற்போது ஃஸூம் (ZOOM) செயலி பாதுகாப்பானது கிடையாது, அதில் நிறைய குறைபாடுகள் உள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதை பயன்படுத்தும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ''இந்தியாவின் கணினி அவசரகால பதில் குழு'' (India's Computer Emergency Response Team -CERT-IN) எனப்படும் செர்ட் இந்த ஃஸூம் (ZOOM) செயலிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து இருந்தது.


ஏற்கனவே எச்சரிக்கை
ஃஸூம் (ZOOM) செயலியின் மூலம் சைபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது . இது அவ்வளவு பாதுகாப்பு இல்லை. உங்களின் கணக்குகள் , முக்கியமான விவரங்கள் திருடப்படலாம் என்று அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ஃஸூம் (ZOOM) செயலியை பயன்படுத்துவதற்கு எதிராக மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர்கள் மீட்டிங் இந்த ஃஸூம் (ZOOM) செயலில் மூலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Join Telegram& Whats App Group Link -Click Here