விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனைக்குட்டத்தில் குடியிருந்து வரும் 134 இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நிவாரண உதவி வழங்கினர்.
சிவகாசி அருகேயுள்ள ஆனைக்குட்டத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ளவர்கள் அருகில் உள்ள நூற்பு ஆலைகள் மற்றும் பட்டாசு ஆலைகளில் கூலி வேலை செய்து வந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள முடக்கத்தால் வேலை வாய்ப்பை இழந்து, பொருளாதாரம் பாதிக்ககப்பட்டு குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனை அறிந்த சிவகாசி பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள அலுவலர்கள் அகதிகள் முகாமில்  உள்ள 134 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான பலசரக்குகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
இதற்கான நிகழ்ச்சி சிவகாசி சார் ஆட்சியர் ச.தினேஷ்குமார், வங்கியின் உதவி பொது மேலாளர் டபிள்யூ. ஆப்ரகாம் செல்வின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வங்கியின் கணக்கு மேலாளர் என்.எஸ்.வேலாயுதம், ஓய்வு பெற்ற மேலாளர் டி.சந்திரராஜன் ஆகியோர் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினர்.