தமிழக பாடத்திட்டம்  உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, தமிழக கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை எவ்வாறு அதிகரிக்கலாம்?

10, 11 பொதுத் தேர்வு மதிப்பெண்கள், +2 செய்முறை தேர்வு, +2 திருப்புதல் தேர்வுகள் இவற்றின் அடிப்படையில் +2 மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 85% இடங்களை தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும், 15% இடங்களை பிற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் வழங்க சட்டம் இயற்றலாம்.

மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான 85% ஒதுக்கீட்டு இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக, CBSE பாடத்திட்டத்தில், +2 பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வில், வினாக்களும், மதிப்பீடும் மிக மிக நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதால், CBSE யில், பயிலும் மாணவர்கள் +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுகிறார்கள். 

ஆனால், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், கடந்த சில ஆண்டுகளாக மிகக் குறைவான மதிப்பெண்களையே பெறும் நிலை உள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள சிறந்த கல்லூரிகளில், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகிறது.

தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 85%  இட ஒதுக்கீடு வழங்கா விட்டால், இனி வருங்காலங்களில் மாணவர்கள் CBSE பள்ளிகளில் அதிக அளவு சேர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரியும்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால், ஆசிரியப் பணியிடங்களும் குறையும். புதிய ஆசிரியர் நியமனங்களும் இராது.  CBSE பள்ளிகள் அதிகரித்தால், தமிழ் மொழி வீழ்ச்சியடைய வாய்ப்புண்டு. CBSE மோகத்தால், பெற்றோர்களின் நிதிச்சுமை அதிகரிக்கும்.

CBSE பள்ளிகளில் பயின்றால், தமிழகத்தில் உள்ள சுமார் 4000 MBBS படிப்புக்கான, அரசு மருத்துவ இடங்களில் மருத்துவம் படிக்க எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என பெற்றோர்கள் நம்புவதால், புற்றீசல் போல CBSE பள்ளிகள் தமிழகத்தில் பெருமளவில் பெருகி வருகின்றன. இதனால் தமிழக கலாச்சாரம், வரலாறு உள்ளிட்ட எதுவுமே வருங்கால சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடும். 

மேலும் CBSE பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழ் மொழியை வாசிக்கத் தெரியாமலேயே போய் விடும் அபாயமும் உண்டு.

தமிழ் மொழியும், மாநில பள்ளிக் கல்வித் துறையும் வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 85% விழுக்காடு இடங்கள், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

விகிதாச்சார அடிப்படையில் பார்த்தாலும், இப்போதைய கணக்குப்படி, மாநில பாடத்திட்டத்தில் +2 பயில்வோர் சுமார் 9 இலட்சம். CBSE பாடத்திட்டத்தில் பயில்வோர் சுமார் 1 இலட்சம்.

தமிழக பாடத்திட்டத்தில் பயில்வோருக்கு 85 % இட ஒதுக்கீடு வழங்கா விடில், இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் CBSE பள்ளிகள் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை!