மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ளப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு வரும் 442 மையங்களில் செப்டம்பர் மாதமே பயிற்சிகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மலேசியாவில் தமிழ் கல்வி - 200-ஆம் ஆண்டு விழா கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது:
மத்திய அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 442 மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் இந்த மாதம் முதலே மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும். 
தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கும் வகையில் மாநில பாடத் திட்டத்தை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
மேலும், மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டுவர உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.