''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கைவரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.
மதுரையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், 23வது தேசிய சகோதாயா மாநாடு நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் இறைவனிடம் சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது. நம் வரலாறு, கலாசாரத்துடன் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களையும் உலக அளவில் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆங்கிலேயர் வகுத்து தந்த கல்வி முறையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாகரிகம், கலாசாரம், பண்பாடு சார்ந்த பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்.தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களை குறிப்பிடாமல், இந்திய வரலாறு முழுமை பெறாது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில், வட மாநிலம் தொடர்பான வரலாறு அதிகம் இடம் பெற்றுள்ளது.குறிப்பாக ராஜராஜசோழன் ஆட்சி, கம்போடியா, வியட்நாம் வரை விரிந்து கிடந்தது என்கின்றனர்.

இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும். ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளை நாம் இங்கு விருப்ப மொழியாக படிக்கும்போது, வட மாநிலங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விருப்ப பாடமாக இடம் பெறச்செய்ய வேண்டும்.வள்ளுவரின் திருக்குறள் உலகத்திற்கே பொதுவானது. அதில் எந்த சூழலுக்கும் ஏற்ற கருத்துக்கள் உள்ளன. திருக்குறள் மற்றும் வள்ளு வரின் வரலாறு குறித்த, என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும்என மத்திய அரசை வலியுறுத்தினேன். அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.டில்லி, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி பேசியதாவது:நாடு முழுவதும், 20 ஆயிரம், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இங்கு, பாடத்திட்டங்கள் மற்றும் புதுமையாக கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.குறிப்பாக ,கிராம மாணவர்களும் எளிமையாக கற்கும் கற்பித்தல் முறை அவசியம். கற்பித்தலுடன் தன்னம்பிக் கையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர், ஆசிரியர், மாணவரிடையே சுமுகமான உறவை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அலங்கரித்த, 'தினமலர்' பட்டம்மாநாட்டில், கல்வி தொடர்பாக பல்வேறு பதிப்பகங்கள் சார்பில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள் மற்றும் உபகரணங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில்,'பட்டம்' தினமலர் மாணவர் பதிப்பு அரங்கு இடம்பெற்றிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட்டம் மாணவர் பதிப்பு வினிேயாகிக்கப்பட்டது. பலர் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.