`
எங்களது பல கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் மே 8-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடக்கும்" என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் நால்வருக்கு விருதுகள் வழங்கும் விழா தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "எங்களது முக்கிய கோரிக்கைகளான 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' ரத்து உள்ளிட்ட எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையையும் இந்த அரசு செய்யவில்லை. நாங்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தியபோதெல்லாம் எங்களது கோரிக்கைகளை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்ற உத்தரவாதமும் உறுதியும் தரப்பட்டது. ஆனால், அவற்றில் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மையாகவும் இருக்கிறது. எனவே, ஜாக்டோ ஜியோ அமைப்பின் முடிவின்படி, பல லட்சம் ஊழியர்களைத் திரட்டி, சென்னைக்குச் செல்கிறோம். அங்கு கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வருகிற மே 8 அன்று திட்டமிட்டபடி நடத்துகிறோம். குறைந்தபட்ச மாணவர்களைக் கொண்ட பள்ளிகளையும் மேல்நிலைப் பள்ளிகளையும் பொறுத்தவரையில் சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளையும் மூடுவதற்கு இயக்குநர் வழியாக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களைக் கணக்கிட்டு இதரப் பணியிடங்களை உபரிப் பணியிடங்களாக அரசு கணக்கிட முடிவெடுத்திருக்கிறது. இந்தப் போக்கு, மாணவர்களின் உயர்கல்வி கனவை தகர்ப்பதோடு எதிர்காலத்தில் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதைக் கவனத்தில் கொண்டு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். தேவையான புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றான்போக்கு மனநிலையை அரசு செயல்படுவதைத் தவிர்த்துவிட்டு, அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர் அனைவருக்கும் ஊதியக்குழு நிலுவையை வழங்கிட அரசு முன்வர வேண்டும். சத்துணவுத் திட்டம் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மேலும், விரிவுபடுத்தி பசியோடு கல்வி கற்கும் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

ஏனைய பாடங்களைப்போல, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் முறையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் கடந்த காலங்களில் நேரடி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவிகிதப் பணியிடங்களாக வகைமாற்றம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்லூரிகளில் முழுவதுமாக நேரடி நியமனங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. உரிய அனைத்துத் தகுதிகளுடன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கல்லூரி விரிவுரையாளர்களாக ஈர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.