சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் 14417 என்ற தொலைபேசி சேவையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சேவையை வழங்கி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ அதிகாரிகள் கூறியது: நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும், மன அழுத்தத்தைப் போக்கவும், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களுக்கு அடிமையாகும் எண்ணத்தைப் போக்கவும் மாணவர்களுக்கு பிரத்யேக ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் எளிதாக செய்யக்கூடிய தியானம், ஆசனங்கள் செய்வது குறித்து தொலைபேசி வாயிலாக ஆலோசனை அளிக்கப்படும்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் ஜூன் 20-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பிரத்யேக ஆலோசனைகளை அளிப்பர். பள்ளி மாணவர்கள் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளைப் பெறலாம். 
பொது மக்களுக்கு யோகா: அதே போன்று பொதுமக்கள், பிரசவித்த தாய்மார்கள் உள்ளிட்டோர் செய்யக்கூடிய ஆசனங்கள் குறித்த செய்முறை விளக்கம் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் இயங்கி வரும் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு வழங்கப்படும்.
மதங்கள் சார்ந்த நிகழ்வாக இல்லாமல் அறிவியல்பூர்வமாக யோகாவை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் யோகா மருத்துவ நிபுணர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.