(காரணம் என்ன? இடை நிற்றல் அதிகமா? 10 ஆம் வகுப்பிற்கு முன்பே தொழில் கல்வியில் சேருதலா? பிறப்பு விகிதம் குறைவா? CBSE பள்ளிகளில் சேருகின்றனரா? பிற மாநிலத்திற்கு குடிபெயர்வா? என EMIS எண் மூலம் கண்டறிய வேண்டும்)

சென்னை : *பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில், 1.37 லட்சம் (சுமார் 13%) குறைந்துள்ளது.*
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதற்கு, மக்கள் தொகை குறைவதே காரணம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

*பத்தாம் வகுப்பு தேர்வை, 2015ல், 11.15 லட்சம் மாணவர்கள் எழுதினர்; இந்த ஆண்டு, 9.76 லட்சம் பேர் மட்டும் எழுதியுள்ளனர்.*

*ஐந்து ஆண்டுகளில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்து உள்ளது.*

மாணவர்களை கணக்கிட்டால், 2015ல், 5.33 லட்சம் பேர் தேர்வு எழுதினர்;

இந்தாண்டு, 4.69 லட்சம் பேர் மட்டும் எழுதியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில், 64 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர் மாணவியரை பொறுத்தவரை, 2015ல், 5.27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்; இந்தாண்டு, 4.68 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். 59 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு தேர்வில், மாணவர் எண்ணிக்கை குறைவுக்கு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைவாக இருப்பதே காரணம்.

ஆனாலும், மாணவர்களில் பலர், எட்டாம் வகுப்புக்கு பின், ஐ.டி.ஐ., படிப்புகளில் சேர்வதும், படிப்பை பாதியில் விடுவதும், மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. 

வரும் ஆண்டுகளில், மாணவர்கள் குறைந்த பட்சம், 10ம் வகுப்பையாவது முடிக்கும் அளவுக்கு, அவர்களது பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.